Highlights
- நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.
- சிறியளவிலான அறிகுறிகள் தோற்றினாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் மூவர் மாத்திரமே இன்றைய நாளுக்குரிய அறிவிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும், ஏனையவர்களுக்கு இரவு 8 மணிக்குப் பின்னர் தொற்று இனங்காணப்பட்டதால் அவர்கள் நாளையதினத்திற்குரிய அறிவிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரில் இருவர் ஏற்கனவே தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
மூன்றாவது நபர் 20 வயதுகளிலுள்ள பெண் எனவும், Bondi பரவலுடன் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளபோதிலும் எங்கிருந்து தொற்று பரவியது என ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் நாளையதினத்திற்குரிய அறிவிப்பில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள 7 பேரில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றையவர் ஆண்டு 3 இல் படிக்கும் சிட்னி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆவார். இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர்.
இதையடுத்து சிட்னியில் சமூகப் பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில், அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
இதேவேளை சிட்னி பெருநகரம், Wollongong மற்றும் Shellharbour பகுதிகள் முழுவதிலும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போதும் பொதுமக்கள் செல்லும் உள்ளக அரங்குகள் அனைத்திலும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டுமென்ற கட்டுப்பாடு, ஜுலை மாதம் 1ம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 12.01 மணிவரை நீடிக்கப்படுவதாக Premier Gladys Berejiklian அறிவித்துள்ளார்.
சிட்னியில் தற்போதைக்கு முடக்கநிலையை நடைமுறைப்படுத்தும் திட்டம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் 28,645 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் Premier Gladys Berejiklian வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


