Key Points
- இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சில மாநிலங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
- பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல அபாயங்கள் உள்ளன என்று அது கூறுகிறது.
இந்தியாவுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, வன்முறை அபாயம் காரணமாக வடகிழக்கு பகுதிகள் மற்றும் சில எல்லைப் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டியதன் அவசியத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மக்களை எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வெளியுறவுத் துறையின் smarttraveller இணையதளத்தின் புதுப்பிப்பின்படி, பயங்கரவாத நடவடிக்கைகள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் குற்றங்களின் அதிக அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு பயணிப்பவர்கள் “ஒட்டுமொத்தமாக அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
“வன்முறை அபாயம் அதிகமாக இருப்பதால் Atari-Wagah எல்லைக் கடவை, வடகிழக்கு மாநிலங்களான அசாம் (கௌஹாத்தி தவிர), நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டிய அவசியத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் இப்போது அறிவுறுத்துகிறோம்" என்று அந்த இணையதளம் கூறுகிறது.
இதேவேளை குறைந்தபட்சம் ஒரு தசாப்த காலமாக இந்தியா-வங்காளதேச எல்லையில் பல தாக்குதல்கள் மற்றும் கொலைகள் நடந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சில ஊடக அறிக்கைகளின்படி, வடகிழக்கு இந்தியாவில் சில கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன.
2021 ஆம் ஆண்டில், அஸ்ஸாம் மற்றும் மிசோரம் இடையே, சர்ச்சைக்குரிய எல்லையில், வன்முறை மோதல்கள் மரணத்திற்கு வழிவகுத்ததாகவும், மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன.
நாகாலாந்தும் மணிப்பூரும், உள்நாட்டுப் போரின் பிடியில் இருக்கும் மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் (லடாக் யூனியன் பிரதேசம் தவிர்த்து) மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு ‘பயணம் செய்ய வேண்டாம்’ என்ற தனது ஆலோசனையை அரசு தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறது.
ஆயுத மோதல்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் அபாயம் இதற்குக் காரணம் என்று அரசு கூறுகிறது.
"நீங்கள் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், தொழில்முறை பாதுகாப்பு ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் பயணக் காப்பீட்டுக் கொள்கை செல்லுபடியற்தாக இருக்கலாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் முழுவதையும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் அதன் சில பகுதிகளில் மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் மோதல் அபாயம் 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.
"புதிய மற்றும் ஏற்கனவே உள்ள அபாயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள ஊடகச்செய்திகளை கவனிக்கவும்" என்பது இந்தியாவிற்குப் பயணிப்பவர்களுக்கு வழங்கப்படும் சமீபத்திய ஆலோசனையாகும்.
இதுதொடர்பில் SBS செய்திகள் DFATஇடம் கருத்து கேட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
