இந்தியாவிலிருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களில் நான்கில் ஒரு விண்ணப்பம் "மோசடி" அல்லது "உண்மையானது அல்ல" என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் கருதுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களைத் தடைசெய்துள்ளன.
விக்டோரியாவில் உள்ள Federation பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள Western Sydney பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன.
இந்தியாவிலிருந்து வரும் மோசடி விசா விண்ணப்பங்களின் அதிகரிப்பு குறித்த கவலைகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட சில இந்திய மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை உள்வாங்குவதற்கு தடை விதித்துள்ளதாக இப்பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
ஏற்கனவே, விக்டோரியா பல்கலைக்கழகம், Edith Cowan பல்கலைக்கழகம், University of Wollongong, Torrens பல்கலைக்கழகம், மற்றும் Southern Cross பல்கலைக்கழகம் ஆகியன இந்தியாவின் சில மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை விதித்துள்ளதாக The Age மற்றும் Sydney Morning Herald இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருந்தது.
இந்தப்பின்னணியில் இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்களை இனி உள்வாங்க வேண்டாம் என்று, தனது கல்வி முகவர்களுக்கு Federation பல்கலைக்கழகம் கடந்தவாரம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோன்று Western Sydney பல்கலைக்கழகமும் தனது முகவர்களிடம், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து மாணவர்களை இனி சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சு, இந்தியாவிலிருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் போக்கு அதிகரித்து வருவதன் காரணமாக, தமது நற்பெயர் மற்றும் தரவரிசை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விசா நிராகரிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களிலிருந்து வரும் விண்ணப்பங்களுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தடைவிதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
