Highlights
- மெல்பனில் Whittlesea, Port Melbourne பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
- பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது.
விக்டோரியாவில் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் சோதனைகளில் புதிதாக ஐவருக்கு சமூகப் பரவல் ஊடாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மெல்பனின் Whittlesea மற்றும் Port Melbourne பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக தொற்றுக்கண்டவர்களில் நால்வர் Whittlesea பரவலுடன் தொடர்புடையவர்கள் எனவும் மற்றவர் Port Melbourne பரவலுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 56,624 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கோவிட் சோதனைகளில் ஐந்து பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று நேற்றையதினம் 47,462 சோதனை முடிவுகளில் நால்வருக்கு மட்டுமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் இரண்டாம்நிலை தொடர்புகள் என சுமார் 15 ஆயிரம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுமார் 1452 மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பின்னணியில் இப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற மற்றும் பராமரிப்பு வழங்க, உடற்பயிற்சி(வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டருக்குள்) மற்றும் வேலை(அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டும்) ஆகிய ஐந்து காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவடைந்து 150ஐக் கடந்துள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சென்றுவந்த இடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


