பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தற்செயலாக வீடுகளில் ஏற்படுகின்ற தீ விரைந்து பரவுவதற்கு அதிக நேரம் எடுக்காது.
தீயின் விளைவுகள் மீள முடியாதவை. மிகச்சிறிய தீப்பிழம்புகள் பேரழிவுகரமான சேதத்திற்கு அல்லது ஆபத்தான சோகத்திற்கு வழிவகுக்கும்.
வெள்ளம், புயல் மற்றும் காட்டுத்தீ போன்ற பிற இயற்கை ஆபத்துகளை விட, ஒவ்வொரு ஆண்டும் வீடுகளில் ஏற்படும் தீ விபத்தில் அதிக மக்கள் கொல்லப்படுகிறார்கள் என Natural Hazards Research Australia மற்றும் Fire Rescue Victoria ஆகியவற்றின் 2019 கூட்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வீடுகளில் உருவாகும் தீவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை என்பதையும் தமது ஆய்வு நிரூபித்திருந்ததாக கூறுகிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியர் மற்றும் Natural Hazards Research Australia தலைமை நிர்வாக அதிகாரி Andrew Gissing.

வீட்டில் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாக குளிர்காலத்தில் ஏற்படுவதாகவும், வெப்பமூட்டும் சாதனங்கள் அல்லது முறைகளின் பாதுகாப்பற்ற பயன்பாடு இதற்குக் காரணம் எனவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
எனவே உற்பத்தியாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப வெப்பமூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துமாறு தீயணைப்பு அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.
உதாரணமாக 'heat beads' அல்லது Liquefied Petroleum Gas (LPG) ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தும் வெளிப்புற வெப்பமூட்டும் உபகரணங்களை வீட்டிற்குள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வெளிப்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட வெப்பமூட்டும் உபகரணங்கள் உட்புறத்தில் பொருத்தமானவை அல்லவெனவும் இவை ஆபத்தான கார்பன் மோனாக்சைடு உருவாக்கத்திற்கு வழிவகுக்கலாம் எனவும் Andrew Gissing எச்சரிக்கிறார்.
ஆய்வின்படி, வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளில் உயிரிழக்கும் அதிக அபாயத்தில் உள்ளவர்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஐந்து வயதுக்கு குறைவானவர்கள் அடங்குவர்.

பெரியவர்களைவிட குழந்தைகளின் தோல் மென்மையானது என்பதால் ஒரு சிறிய, எளிதில் அணைக்கக்கூடிய தீ குழந்தைகளில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என விளக்குகிறார் சிட்னி குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகள் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் மேலாளர் Simone Sullivan.
வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் புகைபிடிக்கும் பொருட்கள் பெரும்பாலும் வீட்டில் ஏற்படும் தீயுடன் தொடர்புடையவை என்றபோதிலும் வீட்டிலுள்ளவர்களின் நடத்தைகள், அவர்களின் வீட்டுச் சூழல் ஆகியவையும் ஆபத்துக்காரணிகளில் அடங்கும் என்கிறார் Natural Hazards Research Australia தலைமை நிர்வாக அதிகாரி Andrew Gissing.
இயங்கும் நிலையிலுள்ள புகை அலாரம், தீயிலிருந்து தப்பிக்கும் திட்டம் மற்றும் சமையலை கவனிக்காமல் விடாமல் இருப்பது போன்ற அடிப்படை வீட்டு தீ பாதுகாப்பு நடைமுறைகளை Andrew Gissing நினைவூட்டுகிறார்.

வெப்ப மூலத்துடன் தொடர்புடைய அபாயங்களை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து தீவிபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் தொடங்குகிறது என்று கூறும் குயின்ஸ்லாந்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளில் தீ பாதுகாப்புக்கான நிர்வாக மேலாளர் Mark Halverson, மக்கள் இரவில் உறங்கச் செல்லும்போது அல்லது வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால், வெப்ப மூலங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகிறார்.
சமீபத்திய ஆண்டுகளில், lithium-ion பேட்டரியால் இயங்கும் சாதனங்களால் ஏற்படும் தீவிபத்துகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
மக்கள் தங்கள் சாதனங்களுக்கு பொருத்தமான சார்ஜரைப் பயன்படுத்தாதபோது ஏற்படும் அபாயங்களைப் பற்றி அறிந்திருந்தால், இந்த தீ விபத்துகளைத் தடுக்க முடியும் என Mark Halverson சுட்டிக்காட்டுகிறார்.
பெரும்பாலான மக்களது வீடுகளின் கொல்லைப்புறங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பதை நாம் காணலாம்.
காய்ந்து போன கிளைகள், சேமித்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள், பழைய உடைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய உபகரணங்கள், புல்வெட்டும் இயந்திரத்திற்கான எரிபொருள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஆனால் இவற்றை சரியானமுறையில் பத்திரப்படுத்திவைப்பதன்மூலம் தீ ஆபத்துக்களை குறைக்கலாம் என்கிறார் குயின்ஸ்லாந்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளில் தீ பாதுகாப்புக்கான நிர்வாக மேலாளர் Mark Halverson.

Smoke alarm தீயைத் தடுப்பதில்லை என்றாலும், அவை மக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கையையும் சில சமயங்களில், அதன் ஆரம்ப நிலையிலேயே தீயை அணைக்கும் வாய்ப்பையும் தருகின்றன.
ஆனால் நீங்கள் தயார்நிலையில் இல்லை என்றால் தீயை அணைப்பது கடினம் எனவும், அப்படியான சந்தர்ப்பங்களில் வீட்டிலுள்ள அனைவரும் உடனடியாக வெளியில் வருவதுடன் 000ஐ அழைப்பதுதான் சிறந்த விடயம் எனவும் Mark Halverson வலியுறுத்துகிறார்.
தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

எடுத்துக்காட்டாக, 000 இலக்கத்தை அழைப்பதைத் தாண்டி வீட்டுத் தீ பாதுகாப்பு பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் அதுகுறித்த பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியம் என்கிறார் சிட்னி குழந்தைகள் மருத்துவமனை குழந்தைகள் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் மேலாளர் Simone Sullivan.
வீட்டில் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தடுப்பது பற்றி குழந்தைகளுடன் பேசுவதற்கு பெற்றோர் சிலநேரங்களில் தயங்கக்கூடும்.
ஆனால் எளிமையாகவும் வேடிக்கையாகவும் நடைமுறைச் செயல்பாடுகளைப்பற்றிச் சொல்லிக்கொடுப்பதன்மூலம் குழந்தைகளுக்கு தீ அபாயம் பற்றிய அறிவுறுத்தலை வழங்கலாம் என Simone Sullivan ஆலோசனை சொல்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




