சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் 1818 இல், Mary Shelly என்ற எழுத்தாளர் Frankestein பிரங்கைஸ்டெயின் என்ற ஒரு நாவலை எழுதினார். விக்டர் பிரங்கைஸ்டெயின் என்ற ஒரு இளம் விஞ்ஞானி, பிணங்களின் உறுப்புகளை பயன்படுத்தி ஒரு ஆய்வகத்தில் செயற்கை மனிதன் ஒருவனை உருவாக்குகிறார். ஆரம்பத்தில் அன்பும் பாசமும் நிறைந்தவனாக இருக்கும் இந்த செயற்கை மனிதன் monster- அசுரன் அல்லது சாத்தானாக மாறி பலபேரைக் கொல்வதோடு, இறுதியில் தன்னை உருவாக்கிய விஞ்ஞானியையே கொன்று விடுகிறான். இந்த கதையை அடிப்படையாக வைத்து எண்ணற்ற திரைப்படங்கள் 1910 தொடக்கம் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்றன. இந்தக் கதை சொல்லவரும் செய்தி என்னவென்றால் ‘மனிதனின் நுண்ணறிவே அவனுக்கு எதிரியாக மாறலாம்’ என்பதுதான்.
இருநூறு வருடங்களின் பின்னர் அதாவது இப்போது, Artificial Intelligence எனும் உருவில் அசுரன் உருவாகியிருப்பதாக பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனிதனின் நுண்ணறிவைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கே எதிரியாக மாறும் நிலை உருவாகிவருவதாக இந்தத் துறையில் சாதனைகள் பலவற்றைப் புரிந்த விஞ்ஞானிகளே சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.
Artificial intelligence -செயற்கை நுண்ணறிவு, மனிதகுலத்திற்கு பெருந்தீங்கை விளைவிக்கக்கூடும் என்ற பரவலாக பல நிபுணர்களும் கூறினாலும், முக்கியமாக, godfather of artificial intelligence - செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் Geoffrey Hinton தான், செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிகளில் சம்பந்தப்பட்டது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளதோடு Google நிறுவனத்திலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார். அவருக்கு இப்போது வயது 75. Neural networks and deep learning என்ற துறைகளில் பேராசிரியர் Hinton செய்த முன்னோடியான ஆராய்ச்சிகள் காரணமாகவே இப்போது பரவலாகப் பேசப்படும், பயன்படுத்தப்படும் ChatGPT போன்ற systems உருவாகின.

அவர்கள் BBC க்கு அளித்த பேட்டியொன்றில், ‘AI chat bots செயற்கை நுண்ணறிவுடனான உரையாடல் மூலமாக உருவாகக்கூடிய ஆபத்துகள் பயங்கரமானவை’ என்று கூறியிருக்கிறார். ‘தற்போதைய நிலையில் செயற்கை நுண்ணறிவு மனிதனின் ஆற்றலைவிட மேம்பட்டதாக இல்லை என்ற போதும், ஆனால் மனிதனின் ஆற்றலை அது விஞ்சும் காலம் வெகு தொலைவிலில்லை; பிழையானவர்களின் கையில் இது வந்தடைந்து, பிழையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நிலை உருவானால், மனிதகுலம் பேராபத்தில் சிக்கும் நிலை உருவாகும்’ என்பதே அவரது கருத்து.
Artificial Intelligenceயின் பேராபத்து குறித்து Geoffrey Hinton முன்வைக்கும் காரணங்கள் பலவுள்ளன. செயற்கை நுண்ணறிவு என்று பார்க்கும்போது, neural networks (மனித மூளை மற்றும் நரம்பியல் தொகுதியை போல ஒரு தொகுதியை உருவாக்குவது) என்பது கற்றல் மற்றும் தகவல்களை அலசுதல் என்பதில் மனித மூளைக்கு நிகரானதாகும். Learn from experience -அனுபத்தின் மூலம் கற்றலை எப்படி மனித மூளை செய்கிறதோ அதேபோல neural networks ஆல் அனுபவத்தின் மூலம் கற்கமுடியும். இது deep learning என்று அழைக்கப்படுகிறது. மனித மூளை சேகரிக்கக் கூடிய அல்லது process செய்யக்கூடிய தரவுகளை விட மிக அதிகமான தரவுகளை சேகரிக்கக்கூடிய process செய்யக்கூடிய நிலையை செயற்கை நுண்ணறிவு வெகு விரைவில் எட்டிவிடும் என்பதும் இதனால் worst case scenario என்ற மிகமோசமான நிலை ஒன்று உருவாகும் பட்சத்தில் இது பிழையான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவது பேராபத்தைத் தோற்றுவிக்கும் என்கிறார். உதாரணமாக ரஷ்ய அதிபர் பியூட்டின் போன்றவர்கள் தமது நோக்கங்களைப் பூர்த்தி செய்ய இதைப் பயன்படுத்தக்கூடும் என்பது Geoffrey Hintonனின் கருத்து.

Artificial Intelligence எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். மனித உடல் என்பது ஒரு biological system. AI என்பது ஒரு digital system. Digital systemத்திலுள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஒரு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஒரு digital systemத்தை உருவாக்கினால் அதைப்போல் ஆயிரக்கணக்கான பிரதிகளை நொடியில் தயாரிக்கமுடியும். ஆனால் அதியுயர் நுண்ணறிவு கொண்ட மனிதனைப் பிரதியெடுக்கமுடியாது. செயற்கை நுண்ணறிவுடன் கொண்ட ஒரு robotவைத்தயாரித்தால், பத்தாயிரம் robot களை தயாரிக்கலாம் . ஒரு robot AI மூலமாக பெறும் கற்றல் அல்லது தரவுகள் 10000 robot களுக்கு நொடியில் கடத்தப்படும். ஆகவே AI யின் வேகம், ஆற்றல், அது பயணிக்கும் திசை என்பன பேராசிரியர் Hinton ஐப்போல மேலும் பல நிபுணர்களையும் கவலை கொள்ளச்செய்திருக்கிறது.
பிரிட்டனின் Advanced research and invention அமைப்பில் பணியாற்றும் Matt Clifford கருத்து தெரிவிக்கும்போது, AIயின் வளர்ச்சி குறித்த பேராசிரியர் Hinton போன்றவர்களுக்கு அதன் பாதுகாப்பு நிர்வாகம் என்பன தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
உலகின் பெரும் பணக்காரர் (Tech billionaire) Elon Musk, மற்றும் AIயின் மற்றொரு பிதாமகர் என்று அறியப்படும் Yoshua Bengio போன்றவர்களும் AI எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இது தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

AI காரணமாக ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகளும் உள்ளன. இப்போதைய நிலையில் AI என்பது பலவழிகளில் நன்மையே அளித்துவருகிறது. ஆனால் இதன் அசுர வளர்ச்சி கவலையளிப்பதாக இருக்கிறது என்பதே நிபுணர்களின் கணிப்பாகும். இந்த அசுர வளரச்சிகாரணமாக ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகள் என்ன என்று பாரக்கும்போது, AI powered job automation என்ற தொழில்நுட்பம்காரணமாக marketing, manufacturing, healthcare போன்ற துறைகளில் 85 million வேலைவாய்ப்புகள் அடுத்த மூன்று வருட காலப்பகுதியில் இல்லாமல் போய்விடும்.
Tik Tok போன்ற செயலிகளில் AI algorithm மூலமாக செய்யப்படக்கூடிய manipulation காரணமாக social manipulation என்ற, சமூகமாக மனிதகுலம் எடுக்கும் தீர்மானங்கள் பாதிக்கப்படும். இளைஞர்களின் கருத்தை மாற்றுவதற்கு சென்றவருடம் பிலிப்பைனில் நடந்த அதிபர் தேர்தலில் Ferdinand Marcos Jr. அவர்கள் Tik Tok செயலிகளைப் பயன்படுத்திக்கொண்டது உதாரணமாகக் காட்டப்படுகிறது.
Privacy and security - தனிமனித அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பு என்பன பாதிக்கப்படுவது. அண்மையில் சீனாவில் காரியாலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் facial recognition technology இந்த ஆபத்தை உணர்த்துகிறது.

AI powered recruiting என்ற முறை காரணமாக ஊழியர்கள் தெரிவுசெய்யப்படுவதில் நடுநிலை மீறப்படலாம். சமூகப் பொருளாதார பெறுமானங்கள் பாதிக்கப்படலாம் என்று அரசியல் வாதிகளும் சமயத்தலைவர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
போராயுதங்களை உற்பத்தி செய்வதற்கு AI பயன்படுத்தப்படுவதால் இந்த ஆயுதங்கள் ஏற்படுத்தக்கூடிய பேரழிவுகள் பற்றி AI and robotics researchers மற்றும் தனிப்பட்டவர்கள் இணைந்த 30,000 பேரைக்கொண்ட குழுவொன்று open letter ஒன்றைப் பல ஆண்டுகளுக்கு முன் முன்வைத்தது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
