கடந்த மாதம் ஆஸ்திரேலியா- இந்தியா இடையே கைச்சாத்திடப்பட்ட Migration and Mobility Partnership Arrangement (MMPA) ஒப்பந்தத்தின்கீழ் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், பட்டதாரிகள், கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள், வணிகர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுக்கான பாதைகள் உட்பட பல விசா வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இளம் இந்திய நிபுணர்களுக்கு 3,000 தற்காலிக வேலை விசாக்கள் வழங்கப்படவுள்ளன.
Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES) என்ற பரீட்சார்த்த திட்டத்தின்கீழ் இவ்விசாக்கள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டமானது குறிப்பிட்ட கல்வித் துறைகளில் அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட இந்திய பட்டதாரிகள் மற்றும் ஆரம்பகால தொழில் வல்லுநர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு புதிய பாதையை வழங்கும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கத்துறை, பொறியியல், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் ஆகியவை தகுதியான துறைகளில் அடங்கும்.
MATES ஒரு பரீட்சார்த்த திட்டமாகத் தொடங்கும் எனவும், ஒரு திட்ட ஆண்டுக்கு முதன்மை விண்ணப்பதாரர்களுக்கு 3,000 இடங்கள் ஒதுக்கப்படும் எனவும், அவர்கள் தமது குடும்பத்தினரையும் ஆஸ்திரேலியா அழைத்துவரலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இத்தற்காலிக விசா திட்டம் ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடிபெயர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை.
தகுதியான இந்தியப் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் பட்டம் பெற்ற 31 வயதுக்குட்பட்ட இந்தியர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடையலாம்.
இதன்கீழ் multiple entryயுடன் கூடிய 24 மாத விசா வழங்கப்படும்.
MATES திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அத்துடன் விண்ணப்பத்திற்கான செயல்முறை மற்றும் பிற விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
