Highlights
- இந்தியாவில் சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களில் 165 பேரை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் ஆஸ்திரேலியா வந்தடைந்தது.
- திட்டமிட்டபடி அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர், எவரும் திருப்பி அனுப்பப்டவில்லை.
- இந்தியாவிலிருந்து மேலும் பல ஆஸ்திரேலியர்கள் ஜுன் 4ம் திகதிக்கு முன்னர் ஆஸ்திரேலியா வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் முதற்கட்டமாக சுமார் 78 பேர் சிறப்பு விமானம் மூலம் டார்வின் அழைத்துவரப்பட்டிருந்தநிலையில் இன்று இரண்டாவது விமானம் மூலம் சுமார் 165 பயணிகள் டார்வின் RAAF base-ஐ வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக Howard Springs தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சிறப்பு விமானத்தில் சுமார் 150 பேர் பயணிக்கவிருந்தபோதிலும் அவர்களில் பலருக்கு கோவிட் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களும் தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் என மொத்தமாக 70 பேர் குறித்த விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத பின்னணியில், இந்தத்தடவை அவ்வாறான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை எனவும் திட்டமிட்டபடி 165 பயணிகளும் ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கென சுமார் 11 ஆயிரம் பேர் DFAT-இல் பதிவுசெய்துவிட்டு காத்திருப்பதாகவும் இவர்களில் சுமார் ஆயிரம் பேர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து இவர்களை கட்டம்கட்டமாக ஆஸ்திரேலியா அழைத்துவரும் நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.
அரசின் இந்தப்பணியில் தாமும் உதவவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு விமானத்தில் பயணிப்பவர்கள் இரு தடவைகள் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை ஜுன் 4ம் திகதிக்கு முன்னர் இன்னும் 6 விமானங்கள் மூலம் இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் பல ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியா வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.