விக்டோரியா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன், மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான பாதையைநோக்கி லேபர் கட்சி சென்றுகொண்டிருப்பதை, இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
விக்டோரிய நாடாளுமன்றத்தில் 88 ஆசனங்களைக் கொண்ட Legislative Assembly அல்லது Lower house, மற்றும் 40 அங்கத்தவர்களைக் கொண்ட Legislative Council அல்லது Upper house ஆகிய இரண்டுக்குமான அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நவம்பர் 26ம் திகதி நடைபெற்றது.
இன்று காலை 8மணி முதல் 6 மணிவரை, 1,700 வாக்களிக்கும் மையங்களில், இரண்டு மில்லியன் வாக்குகள் பதிவாகின. மேலும் இரண்டு மில்லியன் வாக்குகள் முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவாகியுள்ளன.
இன்றையதினம் பதிவான வாக்குகளில் இதுவரை சுமார் 60 சதவீதமானவை எண்ணப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னரே பதிவுசெய்யப்பட்ட லட்சக்கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்பட வேண்டியுள்ளன.
இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட 60 சதவீத வாக்குகளின் அடிப்படையில், லேபர் கட்சி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
Legislative Assembly இல், 45 ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைக்கும் என்பதால், லேபர் கட்சி மூன்றாவது தடவையாக வெற்றிபெறும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் லேபர் கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றிய Premier Daniel Andrews, மாநிலத் தேர்தல் வெற்றியை பிரகடனம் செய்தார்.
முன்னாள் பிரதமர் Paul Keatingஐ மேற்கோள் காட்டுவதன் மூலம் தனது உரையை ஆரம்பித்த Daniel Andrews, தலைமை என்பது பிரபலமானதைச் செய்வதல்ல. தலைமை என்பது சரியானதைச் செய்வதாகும் எனக் குறிப்பிட்டார்.
அந்தவகையில் "முக்கியமானதை" செய்யும் ஒரு அரசிற்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரம் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய விக்டோரியன் லிபரல் தலைவர் Matthew Guy, மாநிலத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த பின்னர், நம் நேரம் மீண்டும் வரும் என்பதை நாங்கள் அறிவோம் என்று தெரிவித்தததுடன், கட்சிக்கு நிறைய வேலைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டின் பிரதமர் Anthony Albanese தனது twitter தளமூடாக, விக்டோரிய Premier Daniel Andrews-க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
லேபர்கட்சியை மூன்றாவது தொடர்ச்சியான தேர்தல் வெற்றிக்கு இட்டுச் செல்கின்ற அதேநேரம், 3000 நாட்கள் பதவியில் இருக்கும் ஐந்தாவது விக்டோரிய premier-ஆக Daniel Andrews காணப்படுகிறார்.
இதுஒருபுறமிருக்க இதுவரை வெளியான முடிவுகளின்படி, கிரீன்ஸ் கட்சி முன்பிருந்ததைவிட அதிகமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக, விக்டோரிய கிரீன்ஸ் தலைவர் சமந்தா ரத்னம் தெரிவித்துள்ளார்.
லேபர் கட்சியையும் லிபரல் கட்சியையும் பின்தள்ளிவிட்டு, கிரீன்ஸ்கட்சி வளர்ந்து வருவதாக அவர் கூறினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
