நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு மெல்பேர்னுக்கு வந்திருந்தபோது இந்தவிடயம் தொடர்பில் நாம் கேட்டபோது இத்திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என அப்போது நமக்குத் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணம் தொடர்பிலும் விளக்கியிருந்தார்.
இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப்பேசும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில் முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த செய்திகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனை மையப்படுத்தி தயாரிக்கப்படும் திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வெளியான செய்தியையடுத்து இதுகுறித்த வாதபிரதிவாதங்கள் ஆரம்பமாகியிருந்த பின்னணியில் தற்போது இவ்விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் போர் நடைபெற்றபோதுகூட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்காதவர் என்றும்- போர் முடிந்தபின்னரும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்றும்- இக்காரணங்களால் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என ஈழப்பின்னணி கொண்ட பலரும் தமிழகத்தின் சில அமைப்புகளும் தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகின்றனர்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகர் விஜய் சேதுபதி அந்த மக்களது மனங்களை நோகடிக்காமல் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமெனவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு மெல்பேர்னுக்கு வந்திருந்தபோது இந்தவிடயம் தொடர்பில் நாம் கேட்டபோது 800 திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என அப்போது நமக்குத் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணம் தொடர்பிலும் விளக்கியிருந்தார்.





