நவுறுவில் கடந்த 2021ம் ஆண்டு தாக்குதலுக்குள்ளான தமிழ் அகதி ராஜேஷ்குமார் ராஜகோபால், சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட தனக்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பு வழங்க வேண்டுமென The Age நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
2021 பெப்ரவரி 9ம் திகதி, 36 வயதான ராஜேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த நவுறுவாசிகள் சிலர் அவரை மோதி கீழே விழச்செய்து அவர்மீது காரை ஏற்றிச்சென்றிருந்தனர்.
இதையடுத்து கை, கால், முகம், முதுகு என பல இடங்களில் என்பு முறிவுக்குள்ளாகி ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டிருந்தார்.
கோமா நிலையில் சிட்னியின் ராயல் பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட ராஜேஷ்குமாருக்கு 19 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒருவாறு உயிர்பிழைக்கவைக்கப்பட்டார்.
"எனக்கு அமைதியான வாழ்க்கை இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் நான் இப்போது ஊனமுற்றவன்" என The Age-இடம் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க, ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டுமொரு பயங்க அனுபவத்தை தான் எதிர்கொண்டதாகவும், இரண்டு வாலிபர்கள் தன்னைத் தாக்கிவிட்டு கொள்ளையடித்துச் சென்றதாகவும், இதுபற்றி தனது caseworkerஇடம் புகாரளித் போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுஇவ்வாறிருக்க ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெறுவதற்கான கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், Auburnஇல் ஒரு சிறிய unit-இல் தனியாக வசித்து வரும் ராஜேஷ்குமார், இன்னும் சமூக காவலில் இருப்பதால், அவரால் வேலை செய்ய முடியாது.
கடல்கடந்த தடுப்புமையங்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அடிப்படையில் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜேஷ்குமாருக்கு ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை குடிவரவு அமைச்சர் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ஆஸ்திரேலிய அரசால் ஆபத்திற்குள்ளாக்கப்பட்ட ராஜேஷ்குமாருக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுயாதீன Monique Ryan நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார்.
உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுவந்த தான், அங்கு திரும்பிச் செல்ல முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜேஷ்குமார், தனது உடல்நிலை மற்றும் சிகிச்சைகளைக் கருத்திற்கொண்டு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கு அரசு ஆவன செய்யவேண்டுமென கோரியுள்ளார்.
எல்லா வழிகளும் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில் தனக்கு ஆஸ்திரேலியாவில் வாழ வழிசெய்யுமாறு உள்துறை அமைச்சர் Clare O’Neilஇடம் வேண்டுகோள்விடுப்பதற்கான நடவடிக்கைகளை ராஜேஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.
தன் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்கும் என்று மருத்துவர் தன்னிடம் கூறினார் எனவும், இங்கே தங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை எனவும் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
