கடந்த மாதம் ஐந்து நாள் இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவர முயன்ற 4 பயணிகளுக்கு அதிகபட்சமாக தலா $5,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்களில் பனங்கிழங்கு, வாழைப்பழம், வெற்றிலை, ஒடியல் மாவு, தாவரத் தண்டுகள் உள்ளிட்ட பொருட்களுடன் இலங்கையிலிருந்து சிட்னி வந்த பயணியும் அடங்குவதாக விவசாயம், மீன்பிடி மற்றும் வனவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கடந்த மே 16ம் திகதி சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும், இவருக்கு சுமார் 5500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதே நாளில், பிலிப்பைன்ஸில் இருந்து பிரிஸ்பேனுக்கு வந்த பயணி ஒருவர் macadamia செடிகள், பருத்தி விதைகள் மற்றும் மாம்பழங்களை கொண்டு வந்தபோது பிடிபட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, வியட்நாமில் இருந்து மெல்பன் வந்தடைந்த ஒருவர் Botox என்று பெயரிடப்பட்ட ஒரு பெட்டியில் தாவர தண்டுகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மே 20 அன்று, வியட்நாமில் இருந்து பிரிஸ்பேனுக்கு வந்த நான்காவது பயணி தேயிலை என பெயரிடப்பட்ட ஒரு பையில் ஒன்பது தாவர தண்டுகளுடன் பிடிபட்டார்.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் foot-and-mouth நோய் கண்டறியப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்நோய்ப்பரவல் ஆரம்பித்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய இழப்பு ஏற்படலாம்.
ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் கடந்த ஆண்டு இறுதியில் திருத்தப்பட்டதுடன், இதை மீறுவோருக்கான அதிகபட்ச அபராதம் $5,500 ஆக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
